அரசியல்

தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம்



தென்கொரிய பொதுமக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்துவருகிறார்கள்.

தென் கொரியத் தலைநகர் சியோலில் நேற்று நடைபெற்ற அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க படைகள் தென்கொரியாவிலிருந்து வெளியேறவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தாட் ஏவுகணைத்திட்டற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத்திட்டம் வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்தும். இரு கொரியாக்களும் இணையக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

தென்கொரியாவின் சியோங்ஜூ பகுதியில் அமேரிக்கா அமைக்கவுள்ள இந்த தாட் ஏவுகணை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சியோங்ஜூ பகுதி மக்களுடன் ஏனைய தென்கொரிய பொதுமக்களும் இணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை அந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது என்று தென் கொரியாவின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான பார்க் கியுன் ஹை கூறியுள்ளார்.



ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஏவுகணை திட்டம், கொரியாவுக்கு மட்டுமல்லாது ஆசியாவுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளன.

தென்கொரியாவில் பலாத்காரமாக அமெரிக்க படைகள் புகுந்த காலம் முதல் தென்கொரிய மக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிவருகிறார்கள்.

தென்கொரியாவில் தனக்கு சார்பான ஆட்சியாளரை பதவியில் அமர்த்த பலமுறை ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ சதி போன்றவற்றை அமேரிக்கா செய்திருந்தது. இதற்கு எதிராக 80களில் தென்கொரிய மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1988ல் தென்கொரிய மாணவர்கள் மிகப்பெரும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள். 5000 இருக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்க தூதரகம் முதல் பல அமெரிக்க நிறுவனங்களை முடக்கி போராட்டத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரிய ஆட்சியாளர்கள் கொடூரமாக இந்த போராட்டத்தை அடக்கியிருந்தார்கள்.

அமெரிக்கா பொருளாதார உதவிகளை செய்தும், வடகொரியாவை காட்டி பயமுறுத்தியும் தென்கொரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.

2002ல் அமெரிக்க படையின் வாகனம் மோதி இரு பதின்ம வயது தென்கொரிய பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. 'அமெரிக்காவே வெளியேறு' என்று தென்கொரிய மாணவர்கள் மக்கள் ஆதரவுடன் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
தென்கொரிய மாணவர் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தியிருந்தது.

2008ல் மீண்டும் மிகப்பெரிய அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அமெரிக்காவிலிருந்து நோயுற்ற மாடுகளின் இறைச்சியை தென்கொரியாவுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் போராட்டம் வெடித்தது. அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் இந்த மக்கள் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியிருந்தனர்.

ஆசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்காவுக்கு தென்கொரியா தேவையாக உள்ளது. குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் தென்கொரியாவை தளமாக பாவித்து வருகிறது.

அமெரிக்கா தென் சீன பிராந்தியத்தில் தனது படைத்தளங்களை அமைக்கவும், அவற்றில் 50,000 இராணுவ படையை நிறுத்தவும் தென்கொரியாவை பயன்படுத்திக்கொண்டது. தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களை அமெரிக்கா தற்போது வைத்திருக்கிறது.

கொரியாவை துண்டாடுவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்திருந்தது. வடகொரியா 1950 ஜூன் 25ல் தென்கொரியா மீது படையெடுத்ததால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகள் அவசியம் என அமெரிக்கா வாதிட்டிருந்தது.

தென்கொரியாவில் அமெரிக்க படைகள் இருக்கவேண்டுமாயின் இரு கொரியாக்களுக்கும் இடையில் மோதல் இருக்கவேண்டும். எனவே அமேரிக்கா தனது ஊடக பலத்தைக்கொண்டு வடகொரியா தென்கொரியாவை தாக்க போகிறது என்று பரப்புரை செய்துவருகிறது.

பொருளாதார தடைகளை விதிப்பது, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஐநாவில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றுவது என்று அமேரிக்கா பல வகைகளிலும் வட கொரியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
இதனால் பதட்டமடையும் வடகொரியா எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை யுத்த பிரகடனமாக ஊடகங்களில் பரப்புரை செய்கிறது அமெரிக்கா.

இந்த பிரச்சனை குறித்து அறிவில்லாத எமது ஊடகவியலாளர்களும் அமெரிக்காவின் பரப்புரையை செய்திகளாக, கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறார்கள்.

கொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.

தென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.

அமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி  தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.
சர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.

வடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல்  தென்கொரியா மீது படையெடுத்தது.
இந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.

1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.
இதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.

பிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.

பொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.

ஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.
கொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.

வடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.

உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.

ஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.

அமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 முதல் 50,000 வரையான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.

இந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.

மலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.

இரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.

எனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

சர்வதேச சுயாதீன அமைப்பான WIN/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.

- என்.ஜீவேந்திரன்


0 comments:

Post a Comment

Powered by Blogger.