இந்தியா

பாலியல் வல்லுறவே ராஜிவ் கொலைக்கு காரணம் - கருணா



இந்திய படைகள் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொடுமை செய்தது. இதனால் கோபமடைந்த பிரபாகரன் ராஜிவ் காந்தி கொல்லப்படவேண்டும் என்று முடிவெடுத்தார் என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

''திலீபனின் மரணத்தின் பின்னர் நாம் போருக்கு ஆயத்தமாகியிருந்தோம்.
வல்வெட்டித்துறையில் இராணுவ ஜீப் வண்டியொன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்தினோம்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் இந்திய இராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர்.
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருந்தனர்.
அந்தக் காலத்தில் பெரிதாக போர் இல்லை என்பதனால் நான் வடக்கில் பிரபாகரனுடன் இருந்தேன்.
அப்போது பிரபாகரன் என்னை அழைத்து “ நீ கிழக்கிற்கு போக வேண்டும்” என உத்தரவிட்டார்.
நான் கிழக்கிற்கு செல்ல சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக பிரபாகரன், ராஜீவை கொலை செய்ய வேண்டுமென கூறினார்.அது இவ்வாறு நடந்தது.
இந்திய இராணுவம் மிகவும் விசாலமானது. அவர்கள் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர்.அவர்கள் பிடிக்கும் கிராமங்களில் வசித்து வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது குறித்து பிரபாகரன் கடும் கோபத்துடன் இருந்தார்.
இறுதியில் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஒன்பது பெண்களை இந்திய இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்த பெண்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டனர், அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அறிந்து கொண்ட பிரபாகரன் “ நாம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும்” என என்னிடம் கூறினார் என கருணா அந்த நேர்காணலில் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை ராஜிவ் காந்தியின் கொலைக்கு கருணா உட்பட பலர் வேறு பல காரணங்களை கூறியிருந்திருக்கிறார்கள்.
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அமுலில் இருந்தது. சமாதான உடன்படிக்கையின் படி புலிகள் ஓரளவாவது ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள். இலங்கை வடகிழக்கின் பாதுகாப்பு இந்திய படைகளிடம் இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 3.10.1987 அன்று அதிகாலை குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 17 விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டார்கள்.
யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததாலும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து இந்திய படை பாதுகாப்பை பொறுப்பெடுத்து இருந்ததாலும், கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என புலிகள் நம்பினார்கள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. கைது செய்தவர்களை இலங்கை படையினர் கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். அதனை தடுக்க இந்திய படை அதிகாரிகள் ராஜிவ் காந்தியின் அனுமதியை கோரினார்கள். ஆனால் ராஜிவ் காந்தி பிழையானவர்களின் வழிநடத்தலால் அதனை தடுக்க கட்டளையிடவில்லை.

உண்மையிலேயே இந்திய படை அதிகாரிகள் இதனால் வரப்போகும் ஆபத்தை அறிந்திருந்தார்கள். இது குறித்து பலமுறை இந்திய மேலிடத்திற்கு அவர் எடுத்து கூறிய போதும் ராஜிவ் காந்தி புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ரீதியில் அலட்சியமாக இருந்துவிட்டார்.

அதன் பின்னர் இந்திய பாதுகாப்பு படை விலகிக்கொள்ள இலங்கை படை கைது செய்த 17 போரையும் கொழும்பு கொண்டு செல்ல முயன்ற போது குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 13 பேர் சயனைட் அருந்தி தற்கொலை செய்தனர்.

இந்த சம்பவமே இந்திய படைக்கும் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாக காரணமாக இருந்தது. இதன் பின்னர் ஏராளமான படுகொலை சம்பவங்களை இந்திய படையினர் செய்திருந்தனர். இவையே பின்னாளில் ராஜிவ் காந்தி கொல்லப்பட காரணமாக இருந்தன.

குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 17 விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர் சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுஷாந்த் சிங் முன்னர் இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவர்.

அவர் தனது நூலில் :
“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.

தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.

மற்றொருபுறம் இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.

மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.

அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.

அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”
இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.