டில்லி ஐகோர்ட், மத்திய அரசு சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதித்தது சரிதான் என உத்தரவு பிறப்பித்தது குறித்து கடும்போக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மோடி அரசின் இஸ்லாமிய எதிர்ப்பு போக்கே இது என அவர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதென்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் தடைவிதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது .
வங்கதேசத் தலைநகர் டாக்காவில், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ரோஹன் இம்தியாஸ். அவர் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தனது முகநூலில் பதிவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு எதிராக மகாராஷ்டிர மாநில போலீஸார் வழக்குகளை பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், பயத்தில் மீண்டும் இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில், ஜாகிர் நாயக் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாகிர் நாயக் அமைப்பு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, நீதிபதி, சஞ்சீவ் சச்தேவ் உத்தரவிட்டதாவது:நாட்டின் நலன் கருதியே, ஜாகிர் நாயக் அமைப்பிற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது; அரசு அளித்துள்ள ஆதாரங்கள், இதை உறுதி செய்கின்றன. ஜாகிர் நாயக் கருத்துகள், இளைஞர்கள் மனதில் பயங்கரவாத எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பிரிட்டன், கனடா, மலேசியா போன்ற நாடுகளும் ஜாகிர் நாயக்குக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment