நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரி பொருள் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து சுமார் ஒரு மாத காலம் போராட்டம் நடைபெற்றது. நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார் கொல்லை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல பாகங்களிலும் இருந்தும் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என சகலரும் நெடுவாசல் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்பாட்டிற்கு மக்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதுவே இந்த போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது.
முதல்வர் பழனிசாமி, ''ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்ற உறுதியை ஏற்று, நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு தீர்மானமாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடமுடியும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்திருந்தனர்.
தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க.தலைவர்கள் பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படாது என்று தொடர்ந்து கூறிவந்தனர். எனினும் அரசியல்வாதிகளைப் பற்றி தெரிந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல முயற்சிகளை மேற்கொண்டார். மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என அவர் உறுதியளித்தார். மத்திய அரசுடன் பேச்சு நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மத்திய அரசு மக்களின் உணர்வினை மதித்து திட்டத்தை ரத்து செய்யும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்று ஹைட்ரோகார்பன் திட்ட பணிகளில் மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய பா.ஜ.க. அரசாங்கம் தனது முடிவில் பிடிவாதமாக உள்ளது.
மத்திய அரசு நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் இன்று கையெழுத்திடுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸிற்கு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கையெழுத்திடவுள்ளார். இதனை மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, தமிழக விவசாயிகளையும் மக்களையும் நம்ப வைத்து போராட்டத்தை கைவிட வைத்த பா.ஜ.க.
தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்துள்ளது.
மத்திய அரசு புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றி திட்டத்தில் கையெழுத்திட்டாலும் மக்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
விரைவில் முன்னரை விட தீவீரமாக போராட்டங்கள் ஆரம்பிக்க இடமுண்டு.
0 comments:
Post a Comment