ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக வருவார் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்
திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய மாஃபா பாண்டியராஜன் ''ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.கவில் உள்ளவர்கள் ஓ.பி.எஸ். தலைமையை ஏற்க விரும்புகிறார்கள். மக்கள், தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக சசிகலா அறிவித்து விட்டு சென்றார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் சசிகலா நியமனம் குறித்து தினகரன் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் கட்சி பொறுப்பை ஏற்பதை தொண்டர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? தினகரனின் பதிலை ஏற்க மறுத்ததன் மூலம் சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஆகையால் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஓ. பன்னீர்செல்வம் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க விரைவில் வீறு நடைபோடும். அ.தி.மு.க வும் இரட்டை இலையும், தலைமைக்கழகமும் உண்மையான அதிமுகவினராகிய நம் பக்கம் வந்து சேரும் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment