தமிழர் தரப்புகளை தமக்குள் மோதவிட்டு விட்டு இலங்கை அரசாங்கம் புத்திசாலித்தனமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழர் தரப்புகள் போன்றவை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொடுக்கின்ற அழுத்தங்களை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. பல ஆண்டுகளாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நீர்க்கச்செய்து உலகின் கரத்தில் பிடிபடாமல் நழுவி வருகிறது.
தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். தமது அரசாங்கத்துக்கு இருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. பலரும் மேலும் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரும் என்று கருதினார்கள்.
பிரித்தானிய இணை அமைச்சர் அலோக் சர்மா இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அலோக் சர்மா தனது உரையில் இதுபற்றித் தாம், இலங்கை அரசாங்கத்துடனும் ஏனைய இணை அனுசரணை நாடுகளுடனும் கலந்துரையாடி வருவதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்குக் கால நீட்டிப்பை வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. ஆயினும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. கால அவகாசத்தை கோரவும் இல்லை. மாறாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை விலாவாரியாக தாணு உரையில் பட்டியலிட்டுள்ளார். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் கடந்த 15 மாதங்களில் அரசியலமைப்பு மாற்றம், சித்திரவதைகளைத் தடுத்தல், உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அவர் எந்த கருத்தையும் சொல்லாது நழுவியுள்ளார். 2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
ஜெனிவாவில் சர்வதேசத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட விடயத்தை கொழும்பில் காற்றில் பறக்கவிட்டது இலங்கை அரசாங்கம்.
போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரி வெளிப்படையாக தெரிவித்தார்.
தற்போது மங்கள சமர வீர தனது உரையில் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து வாய் திறக்கவில்லை. விசாரணையில் கலப்பு பொறிமுறை குறித்து அறவே பேசாமல் வேண்டும் என்றே தவிர்த்துள்ளார்.
உலக அரங்கில் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கும் நல்ல பெயரை வைத்துக்கொண்டு மங்கள ஜெனிவாவில் அடித்து ஆடுகிறார் என்பது தெளிவாகியுள்ளது. நிச்சயமாக இலங்கை அரசாங்கத்தை பாதிக்கும் எந்த தீர்மானத்தையும் ஜெனிவாவில் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதை அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். சர்வதேசம் எப்படியோ இந்த பிரச்னையை இலங்கையின் தலையில் கட்டிவிட்டு நழுவ தருணம் பார்த்திருக்கிறது என்பதையும் அவர் அறிவார்.
0 comments:
Post a Comment