உலகம்

ஐ.எஸ். கோட்டையில் ராணுவம் புகுந்தது



ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோட்டை என்று கருதப்பட்ட ஈராக் நாட்டின் பழம்பெருமை வாய்ந்த மொசூல் நகரின் இதயப்பகுதிக்குள் ஈராக் இராணுவ படைகள் நுழைந்துள்ளன. மொசூல் நகரின் ரயில்வே நிலையத்தை கடந்து மொசூல் நகரத்தின் புகழ்பெற்ற பள்ளிவாசலான அல் நூரியை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.

சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை இஸ்லாமிய உலகின் கலீபாவாக இந்த நகரில் வைத்தே அறிவித்திருந்தார். இந்த மொசூல் நகரத்தின் புகழ்பெற்ற பள்ளிவாசலான அல் நூரியில் இருந்து உலகத்துக்கு நானே இஸ்லாமிய உலகின் புது  கலீபா என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புடன் கடும்போக்கு இஸ்லாமியர்கள் உலகம் முழுவதையும் ஐ.எஸ். கைப்பற்றி இஸ்லாத்தின் கீழ் கொண்டுவரும் என்று கருத்து தெரிவித்தார்கள். உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்தனர். இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலர் இணையம் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்த்து அனுப்பினார்கள். பண உதவி செய்தார்கள்.

ஆனால் சொர்க்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்சி நரகமானது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகமே அதிரும் கொடுமைகளை செய்தார்கள். சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள், புதைக்கப்பட்டார்கள். கொடிய சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைகளும் கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன. உடல் முழுவதையும் மறைக்கும் கருப்பு ஆடை கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில் சிரியாவில் ரஷ்ய இராணுவம் களமிறங்கியதுடன் நிலைமை மாறத்தொடங்கியது. பயங்கரவாதிகள் சிரியாவிலும் ஈராக்கிலும் படிப்படியாக தோற்கடிக்கப்பட்டார்கள்.

இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை இஸ்லாமிய உலகின் கலீபாவாக அறிவித்த அந்த அல் நூரி பள்ளிவாசலருகே இராணுவம் சென்றுவிட்டது. பள்ளிவாசலை கைப்பற்ற இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆங்காங்கே மறைந்துள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இராணுவ ஹெலி ஹொப்டர்கள் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

குண்டுகளால் அதிரும் மொசூல் நகரம் மழையாலும் இருண்ட வானத்தாலும் மிரண்டு கிடக்கிறது. இரு தரப்பு தாக்குதல்களில் இருந்தும்  உயிர்தப்புவதற்காக மக்கள் போராடி வருகிறார்கள். சிறுவர்கள் பெண்கள் என போரில் சம்பந்தப்படாத பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகிறார்கள்.
அகதிகளுக்கு ஆங்காங்கே உதவிகள் வழங்கப்பட்டாலும் உணவும், நீரும், மருந்துகளும் ஏனைய அடிப்படை வசதிகளும் போதிய அளவில் அங்கில்லை. மக்கள் கண்ணீருடன் மழை நனைத்து ஈரமான நிலத்தில் எதிர்காலத்தை பயிரிட காத்திருக்கிறார்கள்.






0 comments:

Post a Comment

Powered by Blogger.