“போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினதும், தமிழ் தலைமைகளினதும் முன்னெடுப்புக்கள் அதிருப்தியளிக்கும் அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மௌனம் புதிராக உள்ளது” என்று வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே சிறந்ததென நினைக்கின்றேன். எதிர்காலத்தில் புதிய கட்சி உருவாகினால் அது குறித்து சிந்திப்பேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் செய்யப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இன்று 42வது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
08.03.2017ல் ஆரம்பித்த போராட்டம் இன்றுவரை தீர்வின்றி தொடர்ந்து வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் இராணுவத்தால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எந்த இரகசிய முகாமும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
0 comments:
Post a Comment